Friday, September 24, 2010

காமன்வெல்த் அலங்கோலம்!!

புலியைப் பார்த்து சூடு போட்ட கதையாகிப் போனது, இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். சீனா ஒலிம்பிக்ஸ் நடத்தியதே, நம்மால் முடியாதா என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாம் பூனை தான் என்று அரசியல்வாதிகள் நிரூபித்துவிட்டனர். ஏற்கனவே "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் எடுத்து, நம் நாட்டின் ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி, 8 ஆஸ்கர் விருதுகளையும் தட்டிக் கொண்டு போய் நம் மானத்தை வெளிநாடுகள் வாங்கி விட்டன. மீதி இருக்கும் மானத்தை வாங்குவதில், சுரேஷ் கல்மாடிக்கும், எம்.எஸ் கில் க்கும் நடுவில் பயங்கர போட்டி வேறு. 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, 1996ல் இருந்து இன்று வரை, 14 ஆண்டுகளாக இருப்பவர் உயர்திரு.சுரேஷ் கல்மாடி. இவருக்கும் விளையாட்டுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா என்றால் கிடையாது. இந்திய விமான படையில் பணி புரிந்து இருக்கிறார். காங்கிரஸில் சேர்ந்து, MP ஆகி விட்டதால், ஏதாவது ஒரு பதவி வேண்டும் என்பதால், இணை இரயில்வே அமைச்சராக இருந்திருக்கிறார், நரசிம்மராவ் அமைச்சரவையில். ஒரு பட்ஜெட் வேறு தாக்கல் செய்து இருக்கிறார். மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்காதலால், 1996 ல் இருந்து ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகக் இருக்கிறார். ஒரு முன்னால் இரயில்வே அமைச்சர் வேறு ஒரு துறைக்கு அமைச்சரானால் ஏற்றுக் கொள்ளலாம். அதுவுமே, இரயில்வே சம்பந்தப்பட்ட துறையாக இருந்தால் தான் ஒத்துக் கொள்ள முடியும். ஆனால், இரயில்வேயில் இருந்து, திடீரென தனக்கு சம்பந்தமேயில்லாத ஒலிம்பிக் சங்கத்தில் குதித்து உள்ளார், இந்த மாண்புமிகு மாஜி. இது தான் தொடக்கம். இது எங்கு சென்று நிற்கிறது என்றால், மு.க.அழகிரி உரத்துறை அமைச்சராக இருப்பதில். இன்னும் தொடர இருக்கிறது.  

ஒலிம்பிக் சங்கத்தின் வேலையே, ஒலிம்பிக்ஸ் செல்லத் தகுதியான வீரர்களைச் கண்டுபிடிப்பது. எந்த ஒரு விளையாட்டிலுமே பெரிதாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ஒருவரை சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் வைத்து இருப்பது நம் நாட்டின் தனித்துவம். அதனால் தான் ஒலிம்பிக்ஸ் ல் இருந்து வெறும் காத்து தான் வருகிறது. பதக்கம் வரவே மாட்டேங்கிறது.

அடுத்த எம்.எஸ். கில். இவரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். அது மட்டுமே போதுமானது. அண்மையில் மல்யுத்த வீரர் சுசில் குமார், மாஸ்கோவில் தங்கம் வென்று, விளையாட்டு அமைச்சரான எம்.எஸ். கில்லைப் பார்க்க வந்த போது, தன்னால் முடிந்த அளவு, சுசில் குமாரின் பயிற்சியாளர்களை அவமதித்து அனுப்பியுள்ளார். புகைப்படம் எடுக்க போன போது, பயிற்சியாளரை வெளியே தள்ளாத குறை. பயிற்சியாளர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? அதற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை இன்னும் இந்த மாண்புமிகு.

அதே போல், பாட்மிண்டன் சாம்பியனான சாய்னா வந்து சந்தித்த போது, அவரின் பயிற்சியாளரான உலகப் புகழ்பெற்ற பாட்மிண்டன் ஆடவர் சாம்பியனான கோபிசந்தைப் பார்த்து இவர் யார் என்று கேட்டவர் தான் இந்த எம்.எஸ்.கில். இதற்கு முன்னர் இவர் பார்த்த வேலை, இந்தியாவின் தேர்தல் ஆணைய அதிகாரி. இவருக்கும் விளையாட்டுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது. ஒரு சீக்கியர் என்பதால் இவருக்கு வந்த சேர்ந்த பதவி இது என்று நினைக்கிறேன்.



இப்படியாக விளையாட்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, மனிதாபிமானம் இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் திட்டமிட்டு நடத்தினால், காமன்வெல்த அலங்கோலாமாகத் தான் இருக்கும். தலைவரும், அமைச்சரும் நேர்மையானவர்களாகவே இருந்தால் கூட, விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியாத இவர்களால், எப்படி அவர்கள் கீழே உள்ள அதிகாரிகள் தவறு / ஊழல் செய்வதை கண்டுபிடிக்க முடியும்? 

இவர்களுக்கு இந்த பதவியைக் கொடுத்த மத்திய அரசே காமன்வெல்த் சூட்டிற்கு காரணம். நண்பர்களே, இதைப் படித்து விட்டு உங்கள் எதிர்ப்பை நீங்களும் எப்படியாவது சொல்லுங்கள். இந்த இருவரும் பதவியில் இருந்து நீக்கப் பட வேண்டும். கொஞ்ச நஞ்சமல்ல, 70000 கோடி செலவு செய்து நடத்தும் விளையாட்டு போட்டி இது. 

No comments: