Saturday, December 04, 2010

ரௌத்திரம் பழகு - எதிர்ப்பைக் காட்டு


"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்பது போல, தகுதி என்று ஒன்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இருப்பதே இந்திய நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை. பிற நாடுகளிலும் இப்படியே இருந்தாலும், மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதனால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.  யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம், கொள்கை என்று ஒன்றும் தேவையில்லை என்பதே உண்மையான நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவதற்கு காரணமாக இருந்தது 1990களில். இப்பொழுது நாட்டின் மீது அக்கறை உள்ள இளைஞர்கள் உள்ளார்களா என்றே ஐயமாக உள்ளது. நான் பேசுவது எல்லாமே நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஊழல்களையும் அதில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் பற்றித் தான். காலம் செல்ல செல்ல, கட்சி ஆரம்பித்தது எதற்காக என்பதே தலைவர்களுக்கு மறந்து விடுகிறது. 

பெரியார், திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் ஆரம்பித்த போது, சாதிக் கொடுமை மற்றும் சாதி வேற்றுமைகளைக் களைய , தமிழர்க்கென ஒரு கட்சி தமிழர்களின் தனித்துவத்தைக் காண்பிக்க (திராவிட நாடு) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்று ஏகப்பட்ட காரணங்களை முன் வைத்தே, தன் கட்சிக்கு கொள்கைகளை வகுத்தார். அந்த காரணங்களும், கொள்கைகளும் போக, தன் கட்சியினருக்கு பதவி ஆசையோ, பண ஆசையோ வந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஒரு விதியைக் கட்சிக்கு வகுத்தார் பெரியார். அதை அவர் உயிரோடு இருக்கும் வரை கண்டிப்பாக கடைபிடித்தார். 

பின்னர், பெரியாரிடம் ஏற்பட்ட வேறுபாடுகளால், தி.க. வில் இருந்து பிரிந்து திமுகவை அண்ணா உருவாக்கிய  போதும்,  தி.க. வின் கொள்கைகளையே தி.மு.கவும் பின்பற்றும் ஆனால் திகவை போல் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவோம்.இந்த மாற்றம் நம் கொள்கைகளைச் செயல்படுத்தவே என்று அறிவித்தார். இது திக மற்றும்  திமுக இடையிலான வித்தியாசமாகவும் ஒரு புதிய கட்சி தோன்ற ஒரு காரணமாகவும் இருந்தது. 1949ல் திமுக உருவாகி 1967ல் ஆட்சியையும் பிடித்தது. அண்ணா 1969ல் இறந்த பின்னர், கருணாநிதி திமுகவின் தலைவர் ஆனார்.

அண்ணாவின் காலத்திலேயே திமுக தன் கொள்கைகளில் அவ்வபோது மாறிக் கொண்டே இருந்தது. முதலில் திகவின் கொள்கைகளில் இருந்து எடுத்து வந்த திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கொள்கை, பின்னர் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாறி, அதன் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று மாறி இன்றும் இருந்து வருகிறது.  இந்தி எதிர்ப்பு மற்றும் மொழிப்போராட்டம்... அண்ணா இருந்த வரை, மாறிக்கொண்டே இருந்தாலும், கொள்கை என்று ஒன்று பெயரளவுக்கு இருந்து வந்தது. அண்ணா போனார். அவரோடு கொள்கைகளும் போனது. திமுகவின் கொள்கை என்ன என்று இன்று எனக்கு தெரியாது.

திமுகவில் இருந்து அதிமுக உருவான போது, அது கொள்கைகளை எதிர்த்து என்பதை விட கருணாநிதியை எதிர்த்தே உருவானது. அண்ணா பெரியாரிடம் வேறுப்பட்டு புதுக்கட்சியை உருவாக்கினார். எம்.ஜி.ஆர் கருணாநிதியை எதிர்த்து அதிமுகவை உருவாக்கினார். எனவே அதிமுகவின் கொள்கைகள் என்ன என்று மக்கள் என்றுமே தெரிந்து கொள்ள முனைந்தது இல்லை. அது தான் ஆரம்பம். அன்று முதல் தமிழ்நாட்டில் எண்ணற்ற கட்சிகள் உருவாகின. எந்த கட்சிக்கும் தனியே கொள்கை என்றோ, கட்டுப்பாடுகள் என்றோ எதுவும் கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே இருப்பது தான் எங்கள் கொள்கை என்று மாறிப் போனது. "ஊருக்கொரு கட்சி, ஆளுக்கொரு கொள்கை" என்று எம்.ஆர்.இராதா கூறுவது போல் ஆகி விட்டது. 

 கட்சிக்கென்று கொள்கை என்று வேண்டாம். தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடாவது வேண்டாமா?ஊழலைப் பொறுத்த வரை நம் நாட்டின் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நிலைப்பாடு தான் என்ன?

காங்கிரஸ் ஊழல் கட்சி என்று கூறிக்கொண்டு, நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக தாங்கள் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் ஊழலைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. ஆக காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது கொள்கையிலோ நிலைப்பாடுகளிலோ!

திமுக மந்திரி அ.ராசா ஊழல் செய்துள்ளார் அவரை நீக்க வேண்டும். திமுக தரும் ஆதரவை நாங்கள் வேண்டுமானாலும் தருகிறோம் என்று அதிமுக கூறுகிறது. காங்கிரஸ் அரசிற்கு தெரியாமலா இவ்வளவும் நடந்து இருக்கும்? அது மட்டுமில்லாமல், காங்கிரஸ் முன் காலங்களில் போபர்ஸ், காமன்வெல்த் போன்ற ஊழலகளில் ஈடுபட்ட கட்சி தானே! அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு அதிமுக எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? உங்கள் நிலைப்பாடு என்ன வென்றால் திமுகவை தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஊழல் செய்து கொள்ளலாம் என்பதா? கொள்கை / நிலைப்பாடு என்று ஒன்றும் கிடையாது. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே கொள்கை. 

மதிமுகவும் திமுகவை எதிர்த்தாலும், காங்கிரஸை எதிர்ப்பது ஈழப் பிரச்சினைகளுக்காக. ஆனால் ஊழல் மட்டும் என்ற பேச்சு வரும் போது என்ன செய்யும் என்று தெரியவில்லை. இப்போதைய சூழ்நிலைகளில் ஈழம் தீரப்போகும் ஒரு பிரச்சினையாக தெரியாதலால், கண்டிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸிற்கு ஆதரவாக மதிமுக போகாது. மதிமுகவுக்கும் தமிழத்தைப் பொறுத்த வரை கொள்கையோ நிலைப்பாடோ கிடையாது. கருணாநிதியை எதிர்ப்பதை கொள்கை. ஈழ ஆதரவு என்பது நிலைப்பாடு. 

பாமகவின் கொள்கைகளையோ, நிலைப்பாடுகளையோ விமர்சிக்க தேவையில்லை என்பதே ஊரறிந்த உண்மை. அந்த கட்சி தேர்தல் மற்றும் பதவிகளுக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கும், தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.

தேமுதிகவின் கொள்கை என்ன என்று விஜயகாந்திடம் கேட்டார்கள். அவர் கூறிய பதில் "தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை ஒழிப்பதற்கு என்ன கொள்கை தேவைப்படுமோ அது தான் என் கட்சியின் கொள்கை". ஆக கொள்கை என்று ஒன்று இப்போதைக்கு கிடையாது. இந்த தேர்தலில் தனியாக நிற்க முடியாது, நின்றால் கட்சி ஆட்டம் கண்டு விடும் என்பதால் இன்னும் தன் நிலைப்பாடுகளைத் தெளிவாக கூறாமல் இருக்கிறார்.

கடைசியாக கம்யூனிஸ்டுகள். தேர்தலில் போது அவ்வ போது கூட்டணி மாறினாலும், இவர்களிடம் கொள்கை என்று கொஞ்சம் உள்ளது. தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு, அமெரிக்காவிடம் பணிந்து போவதற்கு கண்டனம், ஊழல்களை எதிர்த்து போராடுவது, ஒருவர் 3 முறைக்கு மேல் பதவிக்கு வர முடியாது, அரசு சம்பளத்தை கட்சியிடம் கொடுத்து விட்டு, கட்சியிடம் இருந்து குடும்பம் நடத்துவதற்கு பணம் வாங்கிக் கொள்வது, எளிமை, தொழிலாளர்களுக்காக போராடுவது என்று கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளைப் பட்டியலிடலாம். நமக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, சரியோ தவறோ, இவர்களிடம் கொள்கை என்று ஒன்று கண்டிப்பாக உள்ளது. நிலைப்பாடு - காங்கிரஸ் அமெரிக்காவிற்கு அடி பணிகிறது தாராளமயம் மற்றும் தனியார்மயத்தை ஆதரிப்பதால், காங்கிரஸிற்கு எதிர்ப்பு. பாஜக ஒரு மதவாத கட்சி என்று எதிர்ப்பு. 

(இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன, அவை எல்லாவற்றையும் பற்றி எழுதுவது என்றால் இந்த பதிவு முடியாது. ஏனெனில் அவ்வளவு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தொடர்ந்து வரும் இந்த சுட்டியை பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/Category:Political_parties_in_Tamil_Nadu)

ஆக இன்றைய சூழலில், கொள்கை, நிலைப்பாடு உள்ள கட்சிகள் என்று பார்த்தால், அது மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளிடம் மட்டும் தான்.

எப்படி வந்தது இந்த நிலைமை? கொள்கையே இல்லாமல் கட்சி நடத்தும் தைரியம் எங்கிருந்த வந்தது தலைவர்களுக்கு? நம்மிடம் இருந்து தான். "ரௌத்திரம் பழகு" என்று பாரதி கூறியதை நாம் மறந்து விட்டோம்.  சமுதாயத்தில் என்ன நடந்தால் என்ன? யாரைப் பற்றியும் தவறாக கூறாதே! ஒருவர் செய்வது சொல்வது தப்பு என்று தெரிந்தாலும் வீணாக அதைப் பற்றி அவரிடம் கூறி, அவருடைய நட்பை பகைத்து கொள்ளாதே! அவர் சொல்வதை செய்து விட்டு, நீ இருக்கும் இடத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றுப் பார், அப்புறம் வெளிநாடுகளில் எப்படி போய் பணம் சம்பாதிப்பது என்று உன் வாழ்க்கையை பார். இப்படி தான் இன்றைய ITஇளைஞர்களின் எண்ணம் உள்ளது. எதிர்ப்பே இல்லாவிட்டால் நோஞ்சான் கூட நம்மீது கல்லெறிவான். அது போல நாம் எதிர்ப்பே எதற்கும் காட்டாவிட்டால், நம் நாடு இப்படி தான் இருக்கும்.

பார்த்தீர்களா, இங்கிலாந்தில் இராஜபட்சேக்கு காட்டப்பட்ட எதிர்ப்பை.. அவர்கள் இத்தனைக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்பிற்கு பயந்து கூட்டத்தையே ரத்து செய்து விட்டது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். ஆனால் நாம் பிறந்த வளர்ந்த தமிழ்நாட்டிலேயே இருந்துக் கொண்டு ஒன்றும் செய்யவில்லை இராஜபட்ச இந்தியா வந்த போது. அது தான் நமக்கு தெரிந்தது. அவர்கள் பழகியிருக்கும் ரௌத்திரம் சீக்கிரம் நாமும் பழக வேண்டும். இல்லாவிட்டால், இன்னொரு முறை நாம் அடிமைப் பட்டு போனாலும் போவோம். 

இதைப் படிக்கும் பேஸ்புக் நண்பர்களே, இந்தியர்களே, தமிழர்களே, இளைஞர்களே, ஏதேனும் பதிவு செய்யுங்கள், உங்கள் எதிர்ப்பாக. பேஸ்புக் மற்றும் அனைத்து ஊடகங்களும் புகைப்படம், காணொளி, துணுக்குகள் பரிமாறிக் கொள்ள ம்ட்டுமன்று, உங்கள் எதிர்ப்பை உரத்து சொல்வதற்காகவும் தான். பார்க்கிறேன், எத்தனை பேர் பதிவு செய்கிறீர்கள் என்று. நானே முதல்வனாக இருக்கிறேன்.