Friday, September 24, 2010

காமன்வெல்த் அலங்கோலம்!!

புலியைப் பார்த்து சூடு போட்ட கதையாகிப் போனது, இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். சீனா ஒலிம்பிக்ஸ் நடத்தியதே, நம்மால் முடியாதா என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாம் பூனை தான் என்று அரசியல்வாதிகள் நிரூபித்துவிட்டனர். ஏற்கனவே "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் எடுத்து, நம் நாட்டின் ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி, 8 ஆஸ்கர் விருதுகளையும் தட்டிக் கொண்டு போய் நம் மானத்தை வெளிநாடுகள் வாங்கி விட்டன. மீதி இருக்கும் மானத்தை வாங்குவதில், சுரேஷ் கல்மாடிக்கும், எம்.எஸ் கில் க்கும் நடுவில் பயங்கர போட்டி வேறு. 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, 1996ல் இருந்து இன்று வரை, 14 ஆண்டுகளாக இருப்பவர் உயர்திரு.சுரேஷ் கல்மாடி. இவருக்கும் விளையாட்டுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா என்றால் கிடையாது. இந்திய விமான படையில் பணி புரிந்து இருக்கிறார். காங்கிரஸில் சேர்ந்து, MP ஆகி விட்டதால், ஏதாவது ஒரு பதவி வேண்டும் என்பதால், இணை இரயில்வே அமைச்சராக இருந்திருக்கிறார், நரசிம்மராவ் அமைச்சரவையில். ஒரு பட்ஜெட் வேறு தாக்கல் செய்து இருக்கிறார். மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்காதலால், 1996 ல் இருந்து ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகக் இருக்கிறார். ஒரு முன்னால் இரயில்வே அமைச்சர் வேறு ஒரு துறைக்கு அமைச்சரானால் ஏற்றுக் கொள்ளலாம். அதுவுமே, இரயில்வே சம்பந்தப்பட்ட துறையாக இருந்தால் தான் ஒத்துக் கொள்ள முடியும். ஆனால், இரயில்வேயில் இருந்து, திடீரென தனக்கு சம்பந்தமேயில்லாத ஒலிம்பிக் சங்கத்தில் குதித்து உள்ளார், இந்த மாண்புமிகு மாஜி. இது தான் தொடக்கம். இது எங்கு சென்று நிற்கிறது என்றால், மு.க.அழகிரி உரத்துறை அமைச்சராக இருப்பதில். இன்னும் தொடர இருக்கிறது.  

ஒலிம்பிக் சங்கத்தின் வேலையே, ஒலிம்பிக்ஸ் செல்லத் தகுதியான வீரர்களைச் கண்டுபிடிப்பது. எந்த ஒரு விளையாட்டிலுமே பெரிதாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ஒருவரை சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் வைத்து இருப்பது நம் நாட்டின் தனித்துவம். அதனால் தான் ஒலிம்பிக்ஸ் ல் இருந்து வெறும் காத்து தான் வருகிறது. பதக்கம் வரவே மாட்டேங்கிறது.

அடுத்த எம்.எஸ். கில். இவரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். அது மட்டுமே போதுமானது. அண்மையில் மல்யுத்த வீரர் சுசில் குமார், மாஸ்கோவில் தங்கம் வென்று, விளையாட்டு அமைச்சரான எம்.எஸ். கில்லைப் பார்க்க வந்த போது, தன்னால் முடிந்த அளவு, சுசில் குமாரின் பயிற்சியாளர்களை அவமதித்து அனுப்பியுள்ளார். புகைப்படம் எடுக்க போன போது, பயிற்சியாளரை வெளியே தள்ளாத குறை. பயிற்சியாளர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? அதற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை இன்னும் இந்த மாண்புமிகு.

அதே போல், பாட்மிண்டன் சாம்பியனான சாய்னா வந்து சந்தித்த போது, அவரின் பயிற்சியாளரான உலகப் புகழ்பெற்ற பாட்மிண்டன் ஆடவர் சாம்பியனான கோபிசந்தைப் பார்த்து இவர் யார் என்று கேட்டவர் தான் இந்த எம்.எஸ்.கில். இதற்கு முன்னர் இவர் பார்த்த வேலை, இந்தியாவின் தேர்தல் ஆணைய அதிகாரி. இவருக்கும் விளையாட்டுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது. ஒரு சீக்கியர் என்பதால் இவருக்கு வந்த சேர்ந்த பதவி இது என்று நினைக்கிறேன்.



இப்படியாக விளையாட்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, மனிதாபிமானம் இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் திட்டமிட்டு நடத்தினால், காமன்வெல்த அலங்கோலாமாகத் தான் இருக்கும். தலைவரும், அமைச்சரும் நேர்மையானவர்களாகவே இருந்தால் கூட, விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியாத இவர்களால், எப்படி அவர்கள் கீழே உள்ள அதிகாரிகள் தவறு / ஊழல் செய்வதை கண்டுபிடிக்க முடியும்? 

இவர்களுக்கு இந்த பதவியைக் கொடுத்த மத்திய அரசே காமன்வெல்த் சூட்டிற்கு காரணம். நண்பர்களே, இதைப் படித்து விட்டு உங்கள் எதிர்ப்பை நீங்களும் எப்படியாவது சொல்லுங்கள். இந்த இருவரும் பதவியில் இருந்து நீக்கப் பட வேண்டும். கொஞ்ச நஞ்சமல்ல, 70000 கோடி செலவு செய்து நடத்தும் விளையாட்டு போட்டி இது. 

Sunday, September 19, 2010

என்று வரும் அரசின் தகவல் தொழில்நுட்ப திட்டங்களுக்கு விடிவு?

அண்மையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இனிமேல் கால் கடுக்க நிற்க வேண்டாம், இணையம் வழியாக வேலை வாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு / புதுப்பித்து செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்தவுடன், யார் மகிழ்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, நான் மிகவும் மகிழ்ந்து போய் இருந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சி எல்லாம், வலைத்தளம் தொடக்க நாளான, 15/09/2010, அன்றோடு போய்விட்டது. தொடங்கப்பட்ட நாள் முதலே அது வேலை செய்ய வில்லை. இன்று வரை அது சரியும் செய்யப்படவில்லை. (www.tnvelaivaippu.gov.in)


நான் ஏன் மகிழ்ந்து போயிருந்தேன்? எப்படியாயினும் என்னுடைய வேலையான தனியார் IT நிறுவன வேலைகளுக்கு அங்கு போய் பதிவு செய்து எந்த பயனும் இல்லை. ஆனாலும் நான் மகிழ்ந்ததற்கு காரணம் என்னுடைய குடும்ப பின்ணணியே. என் அப்பா,தனக்காக ம்ற்றும் தன்னுடைய தம்பிகளுக்காக, 20 வருடங்களுக்கு முன்னால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கால் கடுக்க நின்று இருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் கூறிய போது, என் மனதும் வலித்தது. இன்றும் என் குடும்பத்தில் கிராமங்களில் உள்ளவர்கள், தூத்துக்குடி சென்று பதிந்து விட்டு வ்ருவது என்க்கு தெரியும். ஒரு நாள் அதற்காகவே செலவிடுவர். காலையிலேயே சென்று விடுவர், வரிசையில் முதலில் இடம் பிடிப்பதற்காக.. ஆனாலும் அதற்கு முன்னரே வரிசையில் குறைந்தது 100 பேராவது நிற்பர். காலையில் சென்றால் மதியம் பதிவு செய்து விட்டு வீடு திரும்புவதற்கு எப்படியும் சாயுங்காலம் ஆகிவிடும். சரி, இந்த பிரச்சினை எல்லாம் இனிமேல் இல்லை என்று நினைத்தால் விடிவு உனக்கு அவ்வளவு சீக்கிரம் தருவோமா என்று என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது தமிழக அரசு.

ஏன் நம் நாட்டில் மட்டும் இப்படி எதுவுமே வேலை செய்ய மாட்டேன் என்கிறது? அதற்கு அந்த வலைத்தளத்தைப் பார்த்தாலே போதும். காரணம் புரிந்துவிடும். வலைத்தளத்தில் நம்மால் பதிவு செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால் கலைஞரையும், மு.க.ஸ்டாலினையும் கண்டிப்பாக பார்க்க முடியும். ஏதோ அவர்களே இந்த வலைத்தளத்தை உருவாக்கியது போல. தமிழக அரசு சம்பந்தப்பட்ட எந்த வலைத்தளத்தை வேண்டுமானாலும் போய் பாருங்கள்! எல்லாவற்றிலும் கலைஞர் படம் போடப் பட்டிருக்கும். கலைஞர் என்ன நினைக்கிறார்? அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரா? அடுத்த ஆட்சியில் அம்மையார் வந்தால் முதல் வேலையே இந்த படங்களை எல்லாம் எடுப்பது தானே! இதைக் கூடவா தலைச்சிறந்த அரசியல் சாணக்கியரான கலைஞருக்கு சொல்லித் தர வேண்டும்?

http://www.chennaicorporation.gov.in/
http://www.mtcbus.org/

பின்லாந்து நாட்டிலுள்ள பேருந்து தகவல் வலைத்தளத்தையும் பாருங்கள் (http://www.reittiopas.fi/en/). அது எவ்வளவு அழகாக வேலை செய்கிறது? ஆனால் தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது போக்குவரத்து கழக வலைத்தளம். இத்தனைக்கும் இந்தியாவில் தான், உலகிலேயே சிறந்த மென்பொருள் வல்லுனர்கள் உள்ளதாக அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏன் நம்மால் மட்டும் முடியவில்லை?

தலைவர்களுடைய படங்களைப் போடுவதற்கு எடுத்த சிரத்தையில் சிறிதேனும், அதை இயங்க வைப்பதில் இருந்து இருந்தால், அது கோடானு கோடி மக்களுக்கு பயன் பட்டிருக்கும். ஆனால், நம் ஆட்சியாளர்கள் தங்கள் பெயரை நிலை நாட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றனர். எல்லா பேருந்து நிழற்குடைகளிலும், அதை எந்த MLA / MP தொகுதி நிதியிலுருந்து கட்டப்பட்டிருக்கிறதோ அதை உடனே எழுதப்படுகிறது. அதனால் மக்களுக்கு என்ன பயன்? ஏன், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு கல் பலகைகளில், அம்மையார் திறந்து வைத்ததாகவும், அய்யா அடிக்கல் நாட்டியதாகவும் இருப்பது போல், உலகில் எங்கும் நாம் பார்க்க முடியாது. தமிழக அரசின் நிதியில் இருந்து பணம் கொடுத்து, அரசு சம்பளத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு, கொத்தனார்களால் தினக்கூலிக்கு கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு..:)

என்ன தெரிகிறது இதிலிருந்து? தன் பெயரை நிலைநாட்டி, எப்பொழுதுமே ஆட்சியில் இருப்பது தான் இவர்களின் குறிக்கோள். காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்த போது, காமராஜர் மதிய உணவு திட்டம் என்று பெயர் வைக்கவில்லை. ஆனால், இப்போது கலைஞர் காப்பீட்டு திட்டம். ஏதோ கலைஞர் தன் சொந்தப் பணத்தில் காப்பீட்டு திட்டம் செயல் படுத்துவது போல். அம்மையாரும் இதற்கு விதி விலக்கல்ல. தன் ஆட்சிக்காலத்தில், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா விரைவு பேருந்து என்று தன் பெயரிலேயே பேருந்து விட்டவர் தான். ஆக மொத்தத்தில் மக்கள் நலன் முக்கியமே இல்லை. ஆட்சியில் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் எப்படி வேலை வாய்ப்பு வலைத்தளம் வேலை செய்யும்?

என்னுடைய கோபம் கலைஞர் அல்லது ஜெயலலிதா மீது அல்ல. இந்த வேலை வாய்ப்பு வலைத்தளம் வேலை செய்யவில்லை என்பதில் தான் கோபம். அவர்களுக்கு எப்படியும் வலைத்தளம் பற்றி ஒன்றும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை. ஆனால், இதைச் செயல் படுத்திய அரசாங்க அதிகாரிகள் என்ன கண்காணிக்கிறார்கள்? இப்படி ஒரு வலைத்தளம் உருவாக்கி கொடுத்தற்காக அந்த நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டாமா? அல்லது அபராதத் தொகை வாங்க வேண்டாமா? அல்லது எப்பாடுபடுத்தியாவது அதை அடுத்த நாளிற்குள் சரி செய்து இருக்க வேண்டாமா? IT துறையில் இருப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இவ்வாறு ஒரு வலைத்தளம் வேலை செய்யாமல் போனால், ஒரு அமெரிக்க நிறுவனம் என்ன செய்யுமென்று? இந்நேரத்திற்குள், அந்த IT நிறுவனம் பேர் சந்தி சிரித்து இருக்கும். ஆனால் இங்கு இது ஒரு பிரச்சினையாகவே மதிக்கப் படவில்லை. என்னைப் போன்ற நாட்டின் மீதும், நாட்டு மக்களின் துன்பம் அறிந்த, IT இளைஞனிடமோ / IT துறையில் ஏதேனும் அனுபவம் உள்ள கண்டிப்பான ஒருவரிடம் இதை ஒப்படைத்து இருந்தால், இந்த திட்டம் நாட்டிற்கே ஒரு வழிக்காட்டி திட்டமாக செயல் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட நபர்கள் அரசிடம் இருக்கிறார்களா என்பது சந்தேகமே!! சந்தேகம் தீர்க்கப்படும் வரை அரசு இப்படி தான் ஏமாந்து போய், நம்மைப் போன்ற மக்களையும் கால் கடுக்க வரிசையில் நிற்க வைக்கும்.

நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அக்கறையுள்ள IT இளைஞர்களின் கையில் என்று தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அதிகாரம் செல்கிறதோ, அன்று தான் இதைப் போன்ற வலைத்தளங்களுக்கும், ஏனைய பிற தகவல் தொழில்நுட்பத் திட்டங்களுக்கும் விடிவு உண்டு. அது வரை அல்லல் படுவதும் வரிசையில் நிற்பதும் தான் வழி :(