Wednesday, October 01, 2008

அமெரிக்கர்கள் இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பயப்படுகின்றனரா?

ஆம் வந்து விட்டது.. இந்தியர்களைப் பார்த்து அமெரிக்கர்கள் அஞ்சும் காலம் வந்தே விட்டது. மென்பொருள் துறை, விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம் என இந்தியாவின் வளர்ச்சி உலகம் அறிந்தது தான். ஆனாலும் வெளிப்படையாக வாய் வார்த்தைகள் மூலமாக அமெரிக்க பிரதிநிதிகள் சொல்லி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்று படித்து விட்டேன்.

இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்த விவாதத்தில் வடக்கு டகோடா மற்றும் 'புதிய மெக்சிகோ' மாகாணங்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பேசியுள்ளனர். வடக்கு டகோடா மாகாணத்தின் பிரதிநிதி பைரன் டார்கன், தன்னுடைய உரையில், இந்திய அணு உலைகளைப் பற்றி விஜயகாந்த் போல ஒரு எண்ணிக்கை ஆராய்ச்சியே நடத்தி உள்ளார்.

"இந்தியாவில் உள்ள மொத்த அணு உலைகளின் எண்ணிக்கை 22. அதில் அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியாக போகும் உலைகள் 14. மீதி இருப்பவை 8. இந்த எட்டில் இந்தியா அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யலாம் ஏனெனில் இவை அணுசக்தி கட்டுப்பாட்டுக்குள் வராது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாமல், ஏற்கனவே அணு ஆயுதங்களைச் சோதனை செய்துள்ள ஒரு நாட்டிற்கு இவ்வாறு ஒத்துழைப்பு அளித்து, மேலும் அவர்களை அணு ஆயுதம் தயாரிக்க உதவும் ஒரு ஒப்பந்தத்தை இவ்வளவு அவசரமாக விவாதிக்க வேண்டுமா?" இது பைரன் டார்கன் இன்று பேசிய உரையின் சாராம்சம்.

ஜெஃப் பிங்கமேன், 'புதிய மெக்சிகோ' பிரதிநிதி, இந்தியாவைப் பற்றி ஒரு பாராட்டு பத்திரமே வாசித்து விட்டார்."1960, 1970 களில் இருந்து வந்த இந்தியா வேறு. இப்பொழுதுள்ள இந்தியா வேறு. கண்டிப்பாக இந்தியா தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நாடு தான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அமெரிக்கா தொழில் நுட்பத்திற்காக இந்தியாவுடன் கைகோர்க்க தான் வேண்டும். இதற்காக அதிபர் எடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஆனால் இந்த காரணங்களுக்காக நம் அணு சக்தி கொள்ககைகளை மாற்றுவது தவறான செயலாகி விடும். இந்த ஒப்பந்தம், அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் தனக்கென பிரத்யேகமாக அணு கொள்கை வைத்துக் கொள்ள விரும்பும் இரான் போன்ற நாடுகளுக்கும், அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாமல் இருக்கும் பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் நாடுகளுக்கு மோசமான முன்னுதாரணமாகி விடும். மேலும் நம்முடைய நிலையை அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் தாய்வான் நாடுகளுக்கு நியாய படுத்த முடியாமல் போய் விடும். எனவே இதை அனுமதிக்க கூடாது."

அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகுமோ இல்லையோ, இந்தியாவை பற்றி அமெரிக்கர்களின் உண்மையான கருத்துக்கள் வெளி வருகின்றன. எனக்கென்னவோ இந்தியா வல்லரசாகும் காலம் அருகி விட்டது போல் தோன்றுகிறது....