Thursday, December 20, 2012

விகடனுக்கு ஒரு கடிதம்


விகடன் குழுமத்திற்கு,

விகடனை வருடங்களாக வரி விடாமல் படித்து விடும் வாசகன் நான். புதன், வியாழன் மற்றும் சனி காலையில் எழுந்தவுடன் முதலில் நான் செய்வது, கணிணியில் விகடன்.காம் போய் அந்த வார இதழைப் படிப்பது தான். என் மனைவியிடம் கூட பல நேரங்களில் அதற்காக திட்டு வாங்கியதுண்டு. அப்படி ஒரு வாசகனாக நான் இருப்பதற்கு முதற் காரணம், விகடனில் வரும் கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிகள் மற்றும் செய்திகளின் தரம் மட்டுமே. கருத்துக்கள் சரியோ தவறோ ஆனால் தரம் குறைவாக இருந்ததாக நான் கண்டதில்லை. அப்படிப்பட்ட எண்ணம் வைத்துக் கொண்டிருந்த எனக்கு தங்களின் புதிய வரவான டைம்பாஸ் இதழில் வரும் கிசுகிசு பகுதி அந்தத் தரத்திற்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்பதைக் கூறவே இந்த பதிவு.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த "பாய்ஸ்" படத்திற்கு விகடன் விமர்சனக் குழு கொடுத்த மதிப்பெண் "சீ! இது ஒரு படமா" என்பது. அதே மதிப்பீடு தான் "துள்ளுவதோ இளமை" படத்திற்கும். "துள்ளுவதோ இளமை" இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் படங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிந்தது தான். ஆனால் பிரம்மாண்ட வெற்றிப்பட இயக்குனர் ஷங்கர், விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா போன்றோர் பங்குப்பெற்ற "பாய்ஸ்" படத்திற்கும் இப்படி ஒரு மதிப்பீடு கொடுத்த போது தான் விகடனின் தரம் என்ன என்பது எனக்கு புரிந்தது. இத்தனைக்கும் அந்த காலக்கட்டத்தில் சுஜாதா விகடனில் "கற்றதும் பெற்றதும்" எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் பாரபட்சமில்லாமல், அப்படத்திற்குக் கொடுத்த மதிப்பீட்டைப் பார்த்து, ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

இது எல்லாவற்றிற்கும் திருஷ்டி வைத்தாற் போல் இருக்கிறது டைம்பாஸ் கிசுகிசு பகுதி. போன வாரம் தான் முதன் முதலாக படிக்க நேர்ந்தது. படித்த செய்தி கீழே:

"பொள்ளாச்சிப் பக்கம் ஒரு ஷூட்டிங். எக்ஸ் அங்கு ஆஜராகி இருந்தார். நடிப்புக்கு இலக்கண மானவரின் வாரிசுதான் ஹீரோ. தாடிக்காரர் இயக்குநர். இந்தப் படத்தின் ஹீரோயின் அப்போது பரபரப்பான நாயகியாக இருந்தார். நம்முடைய நிருபர் எக்ஸுக்கு இயக்குநர் நல்ல பழக்கம் என்பதால், நேரே அவர் தங்கி இருக்கும் அறைக்குச் சென்றார். அப்போது செல்போன் எல்லாம் வரவில்லை. ஹோட்டல் அறைக்குச் சென்றவர் கதவைத் தட்டலாம் என்று கை வைத்தால், அது தொட்டதுமே திறந்துகொண்டது. உள்ளே... அந்த மும்பைப் பைங்கிளியும் தாடி இயக்குநரும் எசகுபிசகாக இருந்தனர். அதிர்ந்துபோன எக்ஸ், அப்படியே ஓசைப்படாமல் திரும்பிவிட்டார். யாரோ வந்துபோன அரவம் உணர்ந்த இயக்குநர், எழுந்து வெளியே வர... அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல வணக்கம் போட்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார் நிருபர் எக்ஸ்!"

தெக்கத்திப் பக்க பேச்சாளர் அவர். மண் மணம் மணக்கப் பேசுவார். எக்ஸ் உடன் நல்ல பழக்கம். சும்மா வீட்டுக்குப்போன நிருபரிடம், ''ஒரு போட்டோவை என் இ-மெயில்லேர்ந்து எடுத்துத் தரணும். எனக்கு இந்த கம்ப்யூட்டர்ல அவ்வளவு விவரம் பத்தாது'' என்று அழைத்துப் போனார். பொதுவாக ஒரு போட்டோவை கம்ப்யூட்டரில் சேமிக்கும்போது, அதற்கு முன்பு எந்த ஃபோல்டரில் சேமித்தோமோ அதே இடத்துக்குத்தான் போய் நிற்கும். இந்த விவரம் அவருக்குத் தெரியவில்லை... பாவம். அவர் சொன்ன போட்டோவைச் சேமிக்க ரைட் கிளிக் செய்தால், அது போய் நின்ற ஃபோல்டர் முழுக்க... நிர்வாணப் படங்கள். எக்ஸுக்கு ஷாக். பேச்சாளருக்கு அதைவிட ஷாக். அந்த நேரம் பார்த்து நெற்றி நிறைய பட்டை வேறு போட்டிருந்தார். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ''தம்பி, நீங்க சின்னஞ்சிறுசுக. நாங்கல்லாம் வயசான கிழங்கட்டைங்க... இப்படிப் பார்த்துக்கிட்டாதான் உண்டு'' என்று நெளிந்து வளைந்து சிரித்தார்!

இந்த செய்திக்கு வந்துள்ள பின்னூட்டங்கள்:

கூடையில் என்ன பூ???
சின்ன தம்பி பட ஷூட்டிங்கா?
அது மட்டும் இல்லே ; கற்பை எதிர்த்து கோர்ட் படி ஏறியவர் ; தமிழ் நாட்டுப் பெண்களுக்கு 'கற்பு' சர்டிபிகேட் வழங்கியவர்.

மேற்காண்பது போன்று சினிமா உலகில் நடக்கும் திரை மறைவு வேலைகளை எட்டிப் பார்ப்பதே தவறு. எட்டிப் பார்த்த பின் அதை வெளிப்படுத்தி வியாபாரமாக்குவது விபச்சாரத்திற்கு ஒப்பாகும் என்றே நான் கருதுகிறேன். ஷங்கர், கஸ்தூரி ராஜா போன்றோர் எடுத்த படங்களுக்கும், இந்த செய்திகளுக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இப்படிப் பட்ட செய்திகளை வெளியிட்டு, அதை வாசிப்பவர்களின் மனதில் காட்சியாக மலரச் செய்து, அவர்களின் பாலுணர்வைத் தூண்டி, பொருளீட்ட வேண்டிய நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்? தமிழருவி மணியன், ராஜு முருகன்.. போன்றோர் விகடனில் எழுதிக் கொண்டிருக்கையில், இப்படிப் பட்ட ஒரு இதழ் உங்கள் குழுமத்தில் இருந்து வெளிவருவது நன்றாகவா இருக்கிறது? இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? ஒரு பக்கம் உண்மை, நேர்மை, நாணயம் என்று பேசி விட்டு அல்லது கட்டுரைகள் வெளியிட்டு விட்டு, மறுபக்கம் திரைப்படத் துறையினரின் அந்தரங்கங்களை பகிரங்கப்படுத்தி வியாபாரம் செய்வது முரணாக இருக்கிறது. எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

"கள்வனின் காதலி" என்ற எஸ்.ஜே சூர்யா திரைப்படத்திற்கு விமர்சனம் வெளியிட்ட போது, கல்கி தன் காவியத்திற்கு வைத்த பெயரை, இந்த படத்திற்கு வைத்து கல்கியை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று வெளியிடப்பட்டு இருந்தது. அதே தான் நானும் கூற விழைகிறேன். விகடன் போன்ற ஒரு குழுமத்தில் இருந்து டைம்பாஸ் கிசுகிசு செய்திகள் வெளியிடுவது, இத்தனை காலமாக விகடனின் தரத்தைக் கட்டி காத்து வந்திருந்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பலரின் உழைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்தை அவமானப்படுத்துவதற்கு இணையாகும் என்றால் மிகையல்ல. இந்த இதழை நிறுத்துவது பொருளாதார காரணங்களுக்காக முடியாதெனினும், குறைந்தபட்சம் இந்த பகுதியையாவது நிறுத்துவீர்கள் என்று எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

இப்படியாக ஒரு கடிதத்தை விகடனுக்கு மின்னஞ்சலில் தட்டி விட்டு ஏதேனும் நடக்கிறதா என்று பார்த்தேன். இந்த வாரம் நிருபர் எக்ஸின் குறிப்புகள் வரவில்லை. நிரந்தரமாக நிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கிசுகிசு பகுதியும், லிட்டில் ஜான் என்ற பெயரில் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்குகளையும் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே ஏமாற்றம் தான். நமக்கு இந்த சமுதாயத்தின் மீது எந்த ஒரு கட்டுப்பாடுமே கிடையாதா? எந்தவொரு மாற்றம் வேண்டுமென்றாலும், மக்களைக் கும்பலாக சேர்த்து போராட்டம் நடத்தினால் தான் காதில் விழுமென்றால் கல்வி கட்டுரைகள் பதிவுகளினால் பயன் தான் என்ன? அதுவும் பவள விழா கொண்டாடிய ஒரு பத்திரிக்கையே தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள தயாரில்லை என்றால், பணத்திற்காகவும் ஓட்டுக்காகவும் அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை எங்கு போய் குறை சொல்ல?

பி.கு: விதண்டாவாதிகள் டைம்பாஸில் வந்த கிசுகிசுவை இங்கு வெளியிட்டு நான் விளம்பரம் தேடிக்கொண்டதாக நினைத்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்தே இதை எழுதியிருக்கிறேன். ஆனால் வேறு வழி இல்லை. தவறு என்ன என்பதை சுட்டிக் காட்ட அதைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

Saturday, October 27, 2012

விஜயகாந்த்

விஜயகாந்த் பத்திரிக்கையாளர்கள் மீது பாய்ந்து விட்டார். இன்னும் சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு பெரிய அவல் கிடைத்து விட்டது. விஜயகாந்தின் புண்ணியத்தால் சின்மயி பற்றிய செய்திகள் மங்கி விடும். சின்மயி மற்றும் விஜயகாந்த், இருவர் விடயங்களில் வெளியே வராத உண்மைகளை ஊடகங்கள் எடுத்துரைப்பதற்கு பதிலாக, அதை வியாபாரமாக்கி குளிர் காய்ந்துள்ளனர் என்பதே உண்மை.

விஜயகாந்த் ஒரு முன்கோபி என்பது அறிந்ததே! சட்டமன்றத்திலேயே நாக்கைத் துறுத்தி பேசியதை மட்டும் வைத்து சொல்லவில்லை. பொதுக் கூட்டங்களில் பேச்சுக்கு இடையூறாக இருக்கும் சில பேரை அவர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றும் முறையிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட கோப குணம் கொண்ட ஒருவரிடம், அவருடைய கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக தலைமையைச்  சந்தித்த நேரத்தில், அதாவது முதுகில் குத்தப்பட்ட வலியுடன் இருக்கும் நிலையில், அதிமுக சார்பு அலைவரிசை (ஜெயா) கேள்வி கேட்கப் போக, விஜயகாந்த் தன் குணத்தைக் காட்டி விட்டார். ஊடகங்கள் இந்த காணொளியை நாளை முழுதும் தொலைக்காட்சியில் ஓளிபரப்பப் போகிறது. ஆனால் இதில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்ன?

உண்மை 1:

விஜயகாந்திற்கு எப்படியோ கணிசமான ஒரு ஓட்டு வங்கி தமிழகத்தில் சேர்ந்து விட்டது. அதை போன தேர்தலில் வடிவேலுவை வைத்து சிதறடிக்க பார்த்த திமுக, முழுதாக வெற்றி பெற முடியவில்லை. ஓட்டு வங்கி இருக்கும் வரை அவருடன் கூட்டணி வைத்து தான் ஆக வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வேறு வரப் போகிறது. தெருவெல்லாம் டாஸ்மாக் திறந்து வைத்துக் கொண்டு அவரைக் குடிகாரர் என்று சொல்வது மக்களிடம் பலிக்கவில்லை. எனவே அவரது கையை வைத்தே அவர் கண்ணைக் குத்த அதிமுக காய்களை நகர்த்த, அதற்கு ஏதுவாக விஜயகாந்தும் நடந்து கொள்கிறார். ஏன் ஜெயலலிதாவை சந்திக்கக் சென்ற 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களே "அம்மா! நாங்க இங்க வந்து உங்களைப் பாத்தது பத்தி விஜயகாந்த் கிட்ட கேட்டாலே போதும். அவர் கோபத்தில பொங்கி தன் மேலேயே மண்ணை வாரி போட்டுக்குவார்" என்று யோசனை கொடுத்து இருக்கலாம்.

உண்மை 2:

இந்த 4 பேரும் தங்கள் தொகுதி நலன் சம்பந்தமாக முதல்வரைச் சந்தித்ததாக கூறியுள்ளனர். தொகுதிக்காக இவர்கள் செய்தது தான் என்ன இந்த ஒரு வருடத்தில்? கடந்த மே மாதத்தில் ஜூனியர் விகடன் நடத்திய வாக்கெடுப்பில் இவர்களைப் பற்றி மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். அனைவரும் பாரபட்சமில்லாமல் மோசம் என்று மக்களால் போற்றப்பட்டுள்ளனர். இவர்களா முதல்வரைச் சந்தித்து தொகுதி நலன் சம்பந்தமாக பேசியிருப்பார்கள்?







திமுகவிற்கு தேர்தலுக்கு பிறகு எப்படி வடிவேலு தேவைப் படவில்லையோ, அதே கதி தான் இந்த 4 பேருக்கும், இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிந்தவுடன். அதற்குள்ளாக முடிந்தவரை சம்பாதித்து கொள்ளத்தான் பார்ப்பார்கள். இவர்கள் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவிலும் சேர மாட்டார்கள். ஏனெனில் கட்சி தாவல் சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர் பதவி போய்விடும். இதைப் போன்று போன ஆட்சியில் எஸ்.வி.சேகர் அதிமுகவில் இருந்து சட்டமன்றம் சென்று, பின்னர் திமுக செயற்கூட்டத்தில் எல்லாம் கலந்துக் கொண்டு, திமுகவில் கடந்த தேர்தலில் இடம் கிடைக்காதலால், இப்பொழுது மீண்டும் அதிமுகவில் சேர ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த 4 பேரும் கண்டிப்பாக தேமுதிகவில் இருந்து விலகி விட்டு எந்த கட்சியும் சாராத சட்டமன்ற உறுப்பினர்களாக, போன முறை எஸ்.வி.சேகர் இருந்த மாதிரி இருக்கப் போகிறார்கள். 

ஆக இந்த 4 பேரும் மக்களுக்கு சேவை செய்வதற்காக வரவில்லை. இவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. இதில் அருண்பாண்டியன் விஜயகாந்த் மூலமாகத்  தான் ஊமை விழிகள் சினிமாவில் அறிமுகமானவர். விஜயகாந்தை உண்மையாக முதுகில் குத்தியவர் இவர் தான்.

உண்மை 3:

அதிமுக திமுக இரண்டின் நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழகத்தில் இவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியாக மாற வாய்ப்பு உள்ள வைகோவிற்கு சிறை (அதிமுக ஆட்சியில்), சீமானுக்கு சிறை (திமுக ஆட்சியில்), விஜயகாந்திற்கு சிறை எல்லாம் வேண்டாம் முன்கோபமே போதும், கம்யூனிஸ்ட் கட்சி தா.பாவின் பேட்டிகளைப் பார்த்தால் அவர் அதிமுகவில் சேர்ந்து விட்டாரா என்று எண்ணத் தோன்றுகிறது. இவையெல்லாம் பார்க்கும் போது இந்த இரண்டு கட்சியை விட்டால் தமிழகத்திற்கு வேறு வழியே இல்லை மாதிரி தெரிகிறது. அப்படியும் மீறி யாருக்காவது லாட்டரி பரிசு போன்று ஓட்டு வங்கி சேர்ந்து விட்டால் அதை சிதறடிக்க இந்த கட்சிகள் செயல்படுத்தும் உத்திகள் தான் எத்தனை!

இதை விஜயகாந்த் ஆதரவு பதிவாக நான் எழுதவில்லை. சில நிகழ்வுகளை ஊடகங்கள் பதிவு செய்யும் விதம் சரியாக இல்லை என்றே சொல்ல வருகிறேன். கண்டிப்பாக விஜயகாந்தின் செயல் மோசமானது தான். நண்பர்களைத் திட்டுவதைப் போல் எல்லாரையும் திட்டுவது பொது வாழ்க்கைக்கு சரியாகாது. ஒத்தும் வராது. அரசியல் ஆசைகளை அவர் மூட்டைக்  கட்டி வைத்து விடலாம்.  ஆனால் அவரின் இந்த குணத்தைப் பிற கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டுக்களாக மாற்றிக் கொள்கிறது. அதை ஊடகங்கள் கண்டும் காணாமலும் இருக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு.

ஊடகங்களும் உதவவில்லை. மூன்றாம் அணி அமைக்க திறனுள்ள தலைவர்களும் ஒன்று சேர வழி தேடப் போவதில்லை. தனியாக நின்று எதிர்த்து வெற்றி பெற திமுக அதிமுக ஒன்றும் சாதாரண எலிகள்  இல்லை. அவை பெரிய யானைகள்... என்று விடுபெறும் தமிழகம் திமுக அதிமுகவிடம் இருந்து???

Saturday, May 19, 2012

வீதிக்கு வராத அடையாளங்கள்


வழக்கு எண் 18/9 படத்திற்கு ஆனந்த விகடன் 55 மதிப்பெண் கொடுத்துள்ளது. கடைசி காட்சிகளில் மக்கள் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள் என்று படித்தேன்,கேட்டேன். சக இயக்குனர்களிடம் இருந்து பாராட்டுகள். படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விட்டது. இன்றும் கூட அரங்கம் நிறைந்த காட்சியாகத் தான் ஓடியது. கலகலப்பு போன்ற ஒரு காமெடி படமும் ஓடிக் கொண்டிருக்கும் வேலையிலும் அரங்கம் நிறைந்து இருக்கிறது என்றால், மக்களின் மனதைக் கண்டிப்பாக தொட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்து கொண்டிருப்பதும், அவர்களை எதுவுமே பண்ண முடியாமல் கையாலாகாதனத்தின் மொத்த உருவமாக வாழ்வதும், ஜோதி போன்ற கதாபாத்திரத்தின் மூலமாக தான் செய்ய வேண்டியதை செய்து முடித்ததினால் வரும் மன நிம்மதியே!!

"என்னடா இவன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அவ்வளவு பேரா இருக்கின்றனர் இந்த சமூகத்தில் என்று நினைக்கிறீர்களா? நான் சந்திக்கவே இல்லையே!"  "இவனுக்கு இதே வேலை டா எப்ப பாரு புலம்பிக்கிட்டு" என்று யோசிப்பவர்களே! நீங்கள் இன்ஸ்பெக்டரைப் போல் ஒருவரைச் சந்திக்காமல் இருக்கின்றீர்கள் என்றால் ஆச்சரியம் தான். ஏனென்றால் இங்கு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்களுக்கு பஞ்சம் இல்லை! ஜோதிகளுக்கு தான். இல்லை நீங்களே ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமாக இருக்கலாம். ஆனால் அடையாளம் வீதிக்கு வராமல் இருக்கலாம். உங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட ஜோதி இன்னும் தயாராகவில்லை. தொடர்ந்து படியுங்கள்!!

ஷர்மான் ஜோஷி நடித்த "Life in a metro" படம் நீங்கள் பார்க்க வேண்டும். அதில் ஷர்மான் ஜோஷி கதாபாத்திரம் பணி உயர்வுக்காகவும், பணத்திற்காகவும். தன் உயர் அதிகாரிகளுக்கு தேவையான "எல்லாவற்றையும்" (வீட்டு வேலைகள், பிற உதவிகள், அதிகாரிக்களுக்கு ஜால்ரா, அவருக்கு பிடித்த பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு தன் வீட்டைக் கொடுப்பது, இத்யாதி, இத்யாதி) செய்து கொடுப்பதாக கதை செல்லும். வெறும் பணி உயர்வுக்காக, சில லட்சங்களுக்காக,  தன்னுடைய சுய மரியாதை, பண்பு, காதல் எல்லாவற்றையும் இழப்பதாக காண்பிக்கப் படும்.  ஷர்மான் ஜோஷி இழந்து பெற்ற பணி உயர்வு நியாயமாக யாருக்கு கிடைத்திருக்க வேண்டுமோ, அவர் தான் இந்த படத்தின் "ஜோதி". உயர் அதிகாரிகளே இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்கள். இந்தியா முழுக்க இப்படி ஒவ்வொரு செயல்பாடுகளிலும் / அலுவலகத்திலும்,  ஏகப்பட்ட ஜோதிகளும் இன்ஸ்பெக்டர்களுமே நிறைந்து உள்ளனர். இப்பொழுது சொல்லுங்கள், நீங்கள் இந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தைச் சந்தித்து இருக்கிறீர்களா என்று??

எஸ்.இராமகிருஷ்ணன் தன் கட்டுரைகளில் ஒன்றில் எழுதியிருப்பார் "ஒரு நாள் சும்மா தி.நகரில் நின்று கொண்டு பத்து ரூபாய் கட்டு வைத்து கொண்டு, உங்களைத் தாண்டிப் போகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்து ரூபாய் கொடுங்கள். நிறைய பேர் ஏன் என்று கேட்காமல் வாங்கி செல்வர்". அப்படி ஆகி விட்டது இன்று பணத்திற்க்கான தேடல். பணம் சேர்ப்பது முக்கியம் தான் ஆனால் நீங்கள் சேர்க்கும் அல்லது உங்களை வந்தடையும் பணம் / பதவி உங்களுக்கு உரியது தானா என்று எண்ணிப் பாருங்கள். அந்த பணம் / பதவி உங்களுக்கு உரியது இல்லை என்றால், நிராகரித்து விடுங்கள். 

அப்படி இல்லாமல் அதை உங்களோடு ஒட்டி கொள்ள அனுமதித்தால், காலப் போக்கில் நீங்கள் ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ஆகி விடுவீர்கள். உங்கள் வேலையிலும் தரம் இருக்காது, குறைந்து விடும். ஆனாலும் பணம் பதவி எதையும் விட மனம் ஒத்துக் கொள்ளாது. எனவே பதவியையும் பணத்தையும் காப்பாற்றிக் கொள்ள அரசியல் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள். ஜால்ராக்களை உங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அந்த ஜால்ராக்களுக்கு பின்னர் பணம் பதவிகள் வாங்கி கொடுக்க வேண்டியிருக்கும். நேர்மையாக செயல்பட வேண்டிய தருணங்களில், தங்கள் ஜால்ராக்களுக்கும் அடிப்பொடிக்களுக்கும் பணம் பதவி வாங்கி தருவதில் அக்கறை காட்ட வேண்டி வரும். அப்படி செயல்படவில்லையென்றால் ஜால்ராக்கள் உங்கள் எதிரிகளோடு சேர்ந்து உங்களைக் கவிழ்த்து விடுவார்கள்.  ஆக மொத்ததில் நீங்கள் மனதளவில் ஒரு ரவுடியைப் / அரசியல்வாதியை போன்று வாழ்வீர்கள். ஆனால் வெளியே ஒரு அரசாங்க அதிகாரியாகவோ / மேலாளராகவோ பார்க்கப் படுவீர்கள்.

இப்படி பணம் சேர்த்து என்ன பயன்? உங்களின் இந்த மாதிரியான அணுகுமுறையினால் நாட்டில் நேர்மையானவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாடே சீரழிந்து வருகின்றது. அது உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தானே பாதிக்கிறது? ஆனாலும் ஏன் திருந்த மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது? படத்தில் இன்ஸ்பெக்டர் தூய இருதயத்தின் மகன், அரசியல்வாதியின் மகன், அநியாயமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் தாளாளரின் மகன் என அனைவருமே அயோக்கியர்களாகவே காண்பிக்கப் பட்டுள்ளனர். இதைப் போன்று தானே உங்கள் குழந்தைகளும் வருவார்கள்? அது உங்களுக்கு சம்மதமா? படத்தில் காண்பிப்பது போல இப்படி பட்டவர்கள் இந்தியாவில் இன்ஸ்பெக்டர், அரசியல்வாதிகளாக மட்டும் இருப்பதில்லை. எல்லா துறையிலும் இருக்கிறார்கள். இந்த பதிவுக்கு facebookல் like போடும் நண்பர்களில் கூட பல இன்ஸ்பெக்டர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

ஆக மொத்ததில் எங்கும் அரசியல் மட்டுமே நீக்கமற நிறைந்து இருக்கிறது. யாரும் அப்பாற்படவில்லை. எனவே எல்லாருக்கும் வசதியாக போய்விட்டது. நாமும் அதே தப்பைச் செய்து விட்டு, "நான் மட்டும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் அப்படி தான் பண்றாங்க" என்று எளிதாக சொல்லிக் கொண்டு போய் விடலாம். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு அநியாயத்திற்கும் எதிர்கால சந்ததியினர் துன்பப்பட போகின்றனர். அதில் உங்கள் வாரிசுகளும் அடக்கம். அவர்களுக்கு நாளை நியாயமாக கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய் உங்களிடம் வந்து கண்ணீர் சிந்தும் போது, நீங்கள் ஷர்மான் ஜோஷி போல் அநியாயமாக பெற்ற பணம் / பதவி அல்லது தகுதியற்றவர்களுக்கு வாரி கொடுத்த பதவிகள் உங்கள் மனதை உறுத்தும். நிம்மதியாக சாக விடாது. 

பணமும் பதவியும் பிரதானம் இல்லை நண்பர்களே. நேர்மையும், தப்பு நடக்கும் போது எதிர்த்து நின்று கோபத்துடன் தட்டி கேட்கும் தைரியமும் தான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். இந்த வாரம் வெளியான வட்டியும் முதலும் தொடரில் வினோபாவே கூறியதாக எழுதப்பட்ட ஒன்று இங்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். "என் அன்பு, மனிதம், கோபம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்"

திருந்த வேண்டும் நண்பர்களே! உண்மையாக கல்வி கற்றவர்கள் / மனிதர்களாக வாழ நினைப்பவர்கள் / மனசாட்சி உள்ளவர்கள் மாறுவார்கள். இல்லையென்றால் இன்ஸ்பெக்டர் அவர்களே! உங்களுக்கான "ஜோதி" தயாராகும் வரை காத்திருங்கள், உங்கள் அடையாளங்கள் வீதிக்கு வரும் நாள் அருகில் தான் உள்ளது.