Saturday, May 19, 2012

வீதிக்கு வராத அடையாளங்கள்


வழக்கு எண் 18/9 படத்திற்கு ஆனந்த விகடன் 55 மதிப்பெண் கொடுத்துள்ளது. கடைசி காட்சிகளில் மக்கள் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள் என்று படித்தேன்,கேட்டேன். சக இயக்குனர்களிடம் இருந்து பாராட்டுகள். படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விட்டது. இன்றும் கூட அரங்கம் நிறைந்த காட்சியாகத் தான் ஓடியது. கலகலப்பு போன்ற ஒரு காமெடி படமும் ஓடிக் கொண்டிருக்கும் வேலையிலும் அரங்கம் நிறைந்து இருக்கிறது என்றால், மக்களின் மனதைக் கண்டிப்பாக தொட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்து கொண்டிருப்பதும், அவர்களை எதுவுமே பண்ண முடியாமல் கையாலாகாதனத்தின் மொத்த உருவமாக வாழ்வதும், ஜோதி போன்ற கதாபாத்திரத்தின் மூலமாக தான் செய்ய வேண்டியதை செய்து முடித்ததினால் வரும் மன நிம்மதியே!!

"என்னடா இவன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அவ்வளவு பேரா இருக்கின்றனர் இந்த சமூகத்தில் என்று நினைக்கிறீர்களா? நான் சந்திக்கவே இல்லையே!"  "இவனுக்கு இதே வேலை டா எப்ப பாரு புலம்பிக்கிட்டு" என்று யோசிப்பவர்களே! நீங்கள் இன்ஸ்பெக்டரைப் போல் ஒருவரைச் சந்திக்காமல் இருக்கின்றீர்கள் என்றால் ஆச்சரியம் தான். ஏனென்றால் இங்கு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்களுக்கு பஞ்சம் இல்லை! ஜோதிகளுக்கு தான். இல்லை நீங்களே ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமாக இருக்கலாம். ஆனால் அடையாளம் வீதிக்கு வராமல் இருக்கலாம். உங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட ஜோதி இன்னும் தயாராகவில்லை. தொடர்ந்து படியுங்கள்!!

ஷர்மான் ஜோஷி நடித்த "Life in a metro" படம் நீங்கள் பார்க்க வேண்டும். அதில் ஷர்மான் ஜோஷி கதாபாத்திரம் பணி உயர்வுக்காகவும், பணத்திற்காகவும். தன் உயர் அதிகாரிகளுக்கு தேவையான "எல்லாவற்றையும்" (வீட்டு வேலைகள், பிற உதவிகள், அதிகாரிக்களுக்கு ஜால்ரா, அவருக்கு பிடித்த பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு தன் வீட்டைக் கொடுப்பது, இத்யாதி, இத்யாதி) செய்து கொடுப்பதாக கதை செல்லும். வெறும் பணி உயர்வுக்காக, சில லட்சங்களுக்காக,  தன்னுடைய சுய மரியாதை, பண்பு, காதல் எல்லாவற்றையும் இழப்பதாக காண்பிக்கப் படும்.  ஷர்மான் ஜோஷி இழந்து பெற்ற பணி உயர்வு நியாயமாக யாருக்கு கிடைத்திருக்க வேண்டுமோ, அவர் தான் இந்த படத்தின் "ஜோதி". உயர் அதிகாரிகளே இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்கள். இந்தியா முழுக்க இப்படி ஒவ்வொரு செயல்பாடுகளிலும் / அலுவலகத்திலும்,  ஏகப்பட்ட ஜோதிகளும் இன்ஸ்பெக்டர்களுமே நிறைந்து உள்ளனர். இப்பொழுது சொல்லுங்கள், நீங்கள் இந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தைச் சந்தித்து இருக்கிறீர்களா என்று??

எஸ்.இராமகிருஷ்ணன் தன் கட்டுரைகளில் ஒன்றில் எழுதியிருப்பார் "ஒரு நாள் சும்மா தி.நகரில் நின்று கொண்டு பத்து ரூபாய் கட்டு வைத்து கொண்டு, உங்களைத் தாண்டிப் போகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்து ரூபாய் கொடுங்கள். நிறைய பேர் ஏன் என்று கேட்காமல் வாங்கி செல்வர்". அப்படி ஆகி விட்டது இன்று பணத்திற்க்கான தேடல். பணம் சேர்ப்பது முக்கியம் தான் ஆனால் நீங்கள் சேர்க்கும் அல்லது உங்களை வந்தடையும் பணம் / பதவி உங்களுக்கு உரியது தானா என்று எண்ணிப் பாருங்கள். அந்த பணம் / பதவி உங்களுக்கு உரியது இல்லை என்றால், நிராகரித்து விடுங்கள். 

அப்படி இல்லாமல் அதை உங்களோடு ஒட்டி கொள்ள அனுமதித்தால், காலப் போக்கில் நீங்கள் ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ஆகி விடுவீர்கள். உங்கள் வேலையிலும் தரம் இருக்காது, குறைந்து விடும். ஆனாலும் பணம் பதவி எதையும் விட மனம் ஒத்துக் கொள்ளாது. எனவே பதவியையும் பணத்தையும் காப்பாற்றிக் கொள்ள அரசியல் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள். ஜால்ராக்களை உங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அந்த ஜால்ராக்களுக்கு பின்னர் பணம் பதவிகள் வாங்கி கொடுக்க வேண்டியிருக்கும். நேர்மையாக செயல்பட வேண்டிய தருணங்களில், தங்கள் ஜால்ராக்களுக்கும் அடிப்பொடிக்களுக்கும் பணம் பதவி வாங்கி தருவதில் அக்கறை காட்ட வேண்டி வரும். அப்படி செயல்படவில்லையென்றால் ஜால்ராக்கள் உங்கள் எதிரிகளோடு சேர்ந்து உங்களைக் கவிழ்த்து விடுவார்கள்.  ஆக மொத்ததில் நீங்கள் மனதளவில் ஒரு ரவுடியைப் / அரசியல்வாதியை போன்று வாழ்வீர்கள். ஆனால் வெளியே ஒரு அரசாங்க அதிகாரியாகவோ / மேலாளராகவோ பார்க்கப் படுவீர்கள்.

இப்படி பணம் சேர்த்து என்ன பயன்? உங்களின் இந்த மாதிரியான அணுகுமுறையினால் நாட்டில் நேர்மையானவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாடே சீரழிந்து வருகின்றது. அது உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தானே பாதிக்கிறது? ஆனாலும் ஏன் திருந்த மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது? படத்தில் இன்ஸ்பெக்டர் தூய இருதயத்தின் மகன், அரசியல்வாதியின் மகன், அநியாயமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் தாளாளரின் மகன் என அனைவருமே அயோக்கியர்களாகவே காண்பிக்கப் பட்டுள்ளனர். இதைப் போன்று தானே உங்கள் குழந்தைகளும் வருவார்கள்? அது உங்களுக்கு சம்மதமா? படத்தில் காண்பிப்பது போல இப்படி பட்டவர்கள் இந்தியாவில் இன்ஸ்பெக்டர், அரசியல்வாதிகளாக மட்டும் இருப்பதில்லை. எல்லா துறையிலும் இருக்கிறார்கள். இந்த பதிவுக்கு facebookல் like போடும் நண்பர்களில் கூட பல இன்ஸ்பெக்டர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

ஆக மொத்ததில் எங்கும் அரசியல் மட்டுமே நீக்கமற நிறைந்து இருக்கிறது. யாரும் அப்பாற்படவில்லை. எனவே எல்லாருக்கும் வசதியாக போய்விட்டது. நாமும் அதே தப்பைச் செய்து விட்டு, "நான் மட்டும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் அப்படி தான் பண்றாங்க" என்று எளிதாக சொல்லிக் கொண்டு போய் விடலாம். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு அநியாயத்திற்கும் எதிர்கால சந்ததியினர் துன்பப்பட போகின்றனர். அதில் உங்கள் வாரிசுகளும் அடக்கம். அவர்களுக்கு நாளை நியாயமாக கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய் உங்களிடம் வந்து கண்ணீர் சிந்தும் போது, நீங்கள் ஷர்மான் ஜோஷி போல் அநியாயமாக பெற்ற பணம் / பதவி அல்லது தகுதியற்றவர்களுக்கு வாரி கொடுத்த பதவிகள் உங்கள் மனதை உறுத்தும். நிம்மதியாக சாக விடாது. 

பணமும் பதவியும் பிரதானம் இல்லை நண்பர்களே. நேர்மையும், தப்பு நடக்கும் போது எதிர்த்து நின்று கோபத்துடன் தட்டி கேட்கும் தைரியமும் தான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். இந்த வாரம் வெளியான வட்டியும் முதலும் தொடரில் வினோபாவே கூறியதாக எழுதப்பட்ட ஒன்று இங்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். "என் அன்பு, மனிதம், கோபம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்"

திருந்த வேண்டும் நண்பர்களே! உண்மையாக கல்வி கற்றவர்கள் / மனிதர்களாக வாழ நினைப்பவர்கள் / மனசாட்சி உள்ளவர்கள் மாறுவார்கள். இல்லையென்றால் இன்ஸ்பெக்டர் அவர்களே! உங்களுக்கான "ஜோதி" தயாராகும் வரை காத்திருங்கள், உங்கள் அடையாளங்கள் வீதிக்கு வரும் நாள் அருகில் தான் உள்ளது.