Friday, August 06, 2010

நான் ஏன் கம்யூனிஸ்ட்களை ஆதரிக்கிறேன்?

அண்மைக் கால தமிழகத்துச் செய்திகளைப் படிப்பவர்களுக்கு இதை நான் ஒன்றும் சொல்ல தேவையிருக்காது. கருணாநிதியைத் திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று ஜெயலலிதாவும், ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று கருணாநிதியும் மாறி மாறி தங்கள் சொத்து இரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் சண்டை போட்டு கொள்வதின் சாராம்சம் தான் என்ன? அது உணர்த்துவது என்ன? இருவரிடமும் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. மாற்றி மாற்றி அது எப்படி உனக்கு வந்தது என்றுக் கேட்டு அசிங்கப்படுத்திக் கொள்கினறனர். 

கருணாநிதியின் குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். நான் சொல்லி தெரிவதற்கு ஒன்றும் இல்லை. மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள், அவர்களின் குடும்பங்கள் அனைத்தும் இன்னும் ஒரு தலைமுறைக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், வெறுமனே படுத்து தூங்கினாலும் கவலையில்லை. எல்லாருக்கும் ஒரு பெரும் வருமானம் ஈட்டும் தொழில் இருக்கிறது.

ஜெயலலிதாவைச் சுற்றி சொத்துக்குவிப்பு வழக்குகள் தான் உள்ளன. பிறந்த நாள் பரிசு, Lexus கார் வாங்கியதில் வழக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என எண்ணிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில், 1950 - 70 களில் வாழ்ந்த தலைவர்கள் போதித்த எளிமை இவர்களிடம் எங்கு போனது? அதைத் தானே அரசியலில் ஈடுபடுவதற்குத் தகுதியாக வைத்து இருந்தனர். ஆனால், யாரேனும் ஒரு தலைவர் திமுகவிலோ, அதிமுகவிலோ நம்மால் இன்று காண்பிக்க முடியுமா? முடியாது. அவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று இன்றைய மக்கள் நினைக்கவில்லை. எங்களுக்கு என்ன இலாபம் என்று தான் மக்கள் பார்க்கின்றனர். அதனால் கலர் டிவி தருகிறேன், இலவச நிலம் தருகிறேன், ஓட்டுக்கு பணம் என்று ஆட்சிக்கு வர முடிகிறது. நீங்கள் எவ்வளவு நாளும் அடித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு கொஞ்சம் பங்கு தந்து விடுங்கள் என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது.

ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும் எளிமையாகத் தான் இருக்கின்றனர். அண்மையில் கோவை இரயிலில் சென்ற போது, தா.பாண்டியன் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அமைதியாக பயணம் செய்து, தனியாக இறங்கிச் சென்றதைப் பார்த்தேன். தா.பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர். திமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஒரு MLA இப்படி போவாரா? இரயிலில் பயணம் செய்யும் போது ஒரு கூட்டமும், இறங்கியதும் வரவேற்க தாரை தப்பட்டையுடன் ஒரு கூட்டமும் அல்லவா இருந்திருக்கும்?

இதுப் போக, அண்மையில் இறந்து போனாரே ஜோதி பாசு, அவர் தன் உடலுறுப்புக்களைப் பல வருடங்களுக்கு முன்னரே தானம் செய்து விட்டு அமைதியாக இருந்து விட்டு இறந்தும் போய் விட்டார். ஆனால் இங்கோ,ஸ்டாலின் உடலுறுப்புக்களைத் தானம் செய்ததை எல்லா பத்திரிக்கையிலும் போட்டு விளம்பரபடுத்தியுள்ளனர். நல்ல வேளை கருணாநிதி செய்ய வில்லை. செய்து இருந்தால் நாம் "தர்மத்தின் தலைவனுக்குப் பாராட்டு விழா" என்ற நிகழ்ச்சி பார்த்து இருப்போம் ரஜினி கமலின் பாராட்டுக்களோடு..

கருணாநிதி தன் வீட்டைத் தன் காலத்திற்குப் பிறகு இலவச மருத்துவமனையாக்க அறக்கட்டளை எல்லாம் அமைத்தார் என்பதற்காகப்  பாராட்டு விழா எல்லாம் நடத்திக் கொண்டிருந்த போது, ஆனந்த விகடன் பிற மாநில முதல்வர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்று பார்த்தது. கம்யூனிஸ்ட் ஆளும் திரிபுரா மாநில முதல்வர், மாணிக் சர்க்கார், வீட்டு வசதித் துறை கொடுத்துள்ள வீட்டில் வாழ்கிறார் என்று அறிந்தேன். இது எப்படி இருக்கு?

அது மட்டுமல்ல, அண்மையில் நடந்த கம்யூனிஸ்ட் அழைத்த பெட்ரோலிய பொருட்கள் விலை  உயர்வை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், மக்கள் இடையூறைத் தவிர்க்கும் பொருட்டு திரிபுரா அரசு பங்கு பெற வில்லை. கம்யூனிஸ்ட் கட்சியும் அதற்காக மாணிக் சர்க்காரை ஒன்றும் கூறவில்லை. இந்த மாதிரி காங்கிரஸ் அல்லது பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடக்க முடியுமா?

தமிழகத்தில் எந்த  கம்யூனிஸ்ட் MLA மீதாவது ஒரு ஊழல் வழக்கு உள்ளதா? தேர்தல் இலாபத்திற்காக, தா.பாண்டியன் மீது திமுக போட்ட வழக்கு என்னவாயிற்று என்று கருணாநிதிக்குத் தான் தெரியும்.

எளிமையும் சொத்து சேர்ப்பதில் ஆசையும் இல்லாத தலைவர்கள் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். அவர்களே இந்திய இளைஞர்களுக்கு வழி காட்ட முடியும். சொத்து சேர்க்கும் தலைவர்களுக்கு அடியில் இருக்கும் தொண்டர்கள், தலைவர்களானதும் சொத்து சேர்ப்பதை ம்ட்டுமே யோசிப்பர், நாடும் முன்னேற்றமும் இரண்டாம் மூன்றாம் பட்சம் தான்.

காலத்தினால் வென்ற தலைவர்களிடம் (காமராஜர், கக்கன், பெரியார், காந்தி...) எல்லாம் இருந்த ஒரே குணம் எளிமையும் நேர்மையும். எளிமையாக இருக்க பழகிக் கொண்டால் நேர்மை தானாக வ்ரும். நேர்மை இருந்தால் நாடு முன்னேறும். இந்த இரு குணங்கள் இல்லாமல் அரசியலில் இருக்கும் தலைவர்களினால் நாடு பின்னேற்றம் மட்டுமே அடையும். முன்னேற்றம் அல்ல. 

இன்றைய காலக்கட்டத்தில் இந்த இரு குணங்கள் உடைய தலைவர்கள் அதிகம் உடைய கட்சியைக் கண்டுபிடித்து வாக்களியுங்கள். நீங்களும் என்னைப் போல கம்யூனிஸ்ட்களை ஆதரிப்பீர்கள்.

No comments: