Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Wednesday, January 12, 2011

சீமானுக்கு ஒரு கடிதம்!!

"அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வேன் - சீமான்.."

நான் எதிர்பார்த்தது போலவே நடந்தேவிட்டது. ஆனால் மகிழ்ச்சி இல்லை. உங்களின் எல்லா கொள்கைகளிலும் உடன்பாடு இல்லையென்றாலும், இலங்கையில் உள்ள ஈழ தமிழர்களுக்கு வாழ்வில் ஏதேனும் திருப்பம் ஏற்பட, அவர்களுக்கு ஒரு சுகாதாரமான அன்றாடம் உணவு கிடைக்கும் ஒரு வாழ்வு கிடைக்க உங்கள் வலிமையும் பேச்சும் நெஞ்சுரமும் பயன்படும் என்று நம்பினேன். நம்புவர்கள் உள்ளனர் தமிழ்நாட்டில். ஆனால் அது எல்லாம் போய்விட்டது இந்த அறிவிப்போடு.

தமிழ்மக்களின் ஆதரவே இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழரின் வாழ்க்கை மாற்றத்திற்கு முக்கியம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தால் தான், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்மக்களின் ஒற்றுமையும் ஆதரவும் உள்ளது என்று உலகுக்கு தெரிய வரும் என்ற கணக்கு சரியானது தான். ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதும், தமிழ்மக்கள் ஆதரவைக் காண்பிப்பதும் முதல் படி மட்டுமே. இரண்டாவது படி உங்கள் கோரிக்கையைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற கூட்டணி மூலமாக அரசாங்கத்தை ஏற்க வைப்பது. ஆனால் நீங்கள் ஆதரிக்கப் போகும் கூட்டணியின் தலைவி அந்த உத்தரவாதத்தைத் இன்னும் தராத போது, தேர்தலுக்குப் பின்னர் ஈழத்தமிழர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, அவர்தம் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வர உங்கள் திட்டம் தான் என்ன?

சரி, எல்லாவற்றையும் திட்டமிட முடியாது தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக தன் முந்தைய ஆட்சிக்காலங்களில் பொடா சட்டங்களின் மூலம் ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு ஆதரவாக பேசியவர்களைச் சிறையில் வைத்தவர்கள் கூடவா போய் கூட்டுச் சேர்வது? இரண்டு மாதத்திற்கு முன்னர் நாங்கள் வேண்டுமானால் ஆதரவு தருகிறோம், திமுகவை கழட்டி விடுங்கள் என்று காங்கிரஸில் போய் தஞ்சம் அடைந்தவர்களா ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு உதவப் போகிறார்கள்? அதிமுகவுக்கு ஆதரவு - இது கண்டிப்பாக அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு. ஈழப் பிரச்சினையை அரசியலாக்கி, அதிமுக கூட்டணிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்க பயன்படப் போகிறீர்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

இதுவரை நான் எழுதியது எல்லாம் ஈழத்தமிழரைக் கருத்தில் கொண்டு. இனிமேல் எழுதப்போவது தாய்தமிழகத்து மக்களைக் கருத்திற் கொண்டு. திமுக கூட்டணியால் தமிழக உரிமைகள் காக்க படவில்லை (முல்லை பெரியார், காவிரி), அது ஒரு ஊழல் கூட்டணி, குடும்ப அரசியல், என்று எண்ணற்ற காரணங்களைச் சொல்லி நீங்கள் சேர்ந்திருக்கும் இடத்திலும் இவை அனைத்தும் உள்ளன. பின்னர் எப்படி தமிழர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்? நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். ஆனால் எங்களுக்கு திரும்பவும் அதே நிலைமை தான்.

அண்மையில் வந்த சுடுகாட்டு கூரை ஊழல் தீர்ப்பு போதுமே, இதைப் புரிந்து கொள்வதற்கு. அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டு கூரையில் ஊழல் செய்ததற்காக, அடுத்து வந்த திமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் அதிமுக அமைச்சர் செல்வகணபதி. அவர் இப்பொழுது திமுகவில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டார்.  சுடுகாட்டு கூரை ஊழலும் மறக்கப்பட்டு விடுதலையும் "வாங்கி விட்டார்".  ஆக ஊழலில் இரண்டு கட்சிகளுமே ஒன்று தான்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மாணவிகள் எரிப்பு என்றால், திமுக ஆட்சிக்காலத்தில் தினகரன் அலுவலகம் எரிப்பு. திமுக அரசு உமா சங்கர் IASஐ தூக்கி எறிந்தது என்றால், அதிமுக எல்லா அரசு ஊழியர்களையும் சிறையில் அடைத்தது. திமுகவில் அழகிரி,ஸ்டாலின்,கனிமொழி, தயாநிதி; அதிமுகவில் சசிகலா, தினகரன், சுதாகரன். திமுக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஊழல். அதிமுக ஆட்சியில் கணக்கில் அடங்கா ஊழல்கள்.  திமுகவிற்கு சீமான் என்றால், அதிமுகவிற்கு செரீனா. இப்படி இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கும் போது, திமுகவை எதிர்த்து விட்டு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்பது உங்கள் நம்பகத்தன்மையைக் குறைத்து விடும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, திமுக அதிமுக யார் வந்தாலும் நடக்கப்போவது ஊழல் குடும்ப ஆட்சி தான். இதை மக்கள் நன்றாகவே அறிந்து உள்ளனர். எனவே தான், எந்த ஆதரவு இல்லாமல் வந்த விஜயகாந்த் 11% வாக்குகள் பெற முடிகிறது. ஆனால் பிற கட்சிகளான பாமக மதிமுக கம்யுனிஸ்ட் காங்கிரஸ் ஆகியவை திமுக அதிமுகவை விட்டு வராமல் சேர்ந்தே இருப்பதால் தான் திமுக அதிமுக முக்கிய கட்சிகளாக இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறது. மற்ற கட்சிகள் இரண்டாம் நிலை கட்சியாகவே இருக்கிறது. அதே நிலைமையை நோக்கித் தான் நீங்களும் இப்போது பயணப்பட போகிறீர்கள்.

மொத்ததில் உங்கள் அதிமுக ஆதரவு பிரச்சாரம் ஜெயலலிதாவுக்கு ஆட்சியைப் பிடிப்பதை இன்னும் கொஞ்சம் எளிதாக்கப் போகிறது. மற்றபடி தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் அதே நிலைமை தான் இன்னும் 5 வருடத்திற்கு.மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் முடிவை. இல்லா விட்டால் நீங்கள் இன்னுமொரு வைகோவாக கூடிய சீக்கிரம் ஆகப் போகிறீர்கள்.